Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சென்ற 700 வாகனங்கள் தடுத்து நிறுத்தம் : முகக்கவசம் அணியாத 4.88 லட்சம் பேர் மீது வழக்கு

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போலீஸார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்கின்றனர். மாவட்ட எல்லைகளில் இந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முறையான ஆவணங்களுடன் வரும் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வந்த வாகனங்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். சோதனைச் சாவடிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட இந்த வாகனங்கள், காலை 4 மணிக்கு பின்னர் மீண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதமும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதோருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

தனிமனித இடைவெளி

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 15 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 4 லட்சத்து 88 ஆயிரத்து 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 508வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் செயல்படுத்தும் விதம் குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஜே.கே.திரிபாதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x