Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை விவகாரம் - ‘தேர்வின்றி தேர்ச்சி’ நிலையே தொடர்கிறது : பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மதிப்பெண் கணக்கீட்டு முறையில் சிக்கல் நிலவுவதால் 10-ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் சர்ச்சையானதுடன், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பெற்றோர், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது என்று கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

10-ம் வகுப்பு மதிப்பெண் மாணவர்கள் உயர்கல்விக்கு மிகவும் அவசியமாகும். எனவே, அரசு அறிவிப்பின்படி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கினாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பம் நிலவுகிறது. கடந்தாண்டு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் எவ்வித தேர்வுகளும் நடத்தப்படாததால் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம்.

அதன்படியே 9-ம் வகுப்பு மதிப்பெண்களை மீண்டும் பயன்படுத்துதல், பள்ளிகள் அளவிலான இணையவழி தேர்வு, கிரேடு முறைசான்றிதழ் உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், இதில் இறுதிமுடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்ட சாராம்சங்கள் ஊடகங்களில் வெளியானதால் தற்போதுகுழப்பம் உருவாகி விட்டது. கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை.

அரசு அறிவித்தபடி தேர்வின்றி தேர்ச்சி நிலையே தொடர்கிறது. எனவே, மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைய தேவையில்லை. மேலும், அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் இதில் உடனே எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x