Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

காட்பாடி அருகே பட்டாசுக் கடை தீ விபத்தில் - 2 குழந்தைகளை பறிகொடுத்த தாய் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை :

தனுஜ்மோகன், வித்யாலட்சுமி, தேஜஸ். (கோப்புப் படம்)

கே.வி.குப்பம்

காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய் ரயில் முன்பு பாய்ந்து நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த மோகன்(55) என்பவர், அதேபகுதியில் நடத்தி வந்த பட்டாசுக் கடையில் கடந்த 18-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், மோகன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் தேஜஸ் (8), தனுஜ்மோகன்(6) ஆகியோர் உயிர்இழந்தனர்.

இந்நிலையில், பட்டாசு கடைவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி (34) நேற்று அதிகாலை லத்தேரி ரயில் நிலையம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 2 குழந்தைகளையும் பறிகொடுத்த வித்யாலட்சுமி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாலட்சுமி, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜோலார்பேட்டை ரயில்வேகாவல் துறையினர் வித்யாலட்சுமி உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபரீத முடிவு

வித்யாலட்சுமிக்கும், சென்னையைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் பிறந்த பிறகு தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கணவரைப் பிரிந்த வித்யாலட்சுமி, லத்தேரியில் உள்ள தாய் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார்.

தாத்தா, பாட்டி பராமரிப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு வித்யாலட்சுமி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பட்டாசுக்கடை விபத்தில் தந்தையையும், 2 குழந்தைகளையும் பறிகொடுத்தஅவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான், வித்யாலட்சுமி ரயில்முன்பு பாய்ந்து விபரீத முடிவைதேடிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x