Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி :

நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விவேக் மரணத்தின்போது, கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ், போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின்கீழ் வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். தான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றும், கரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் பேசினேன் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

கடும் ஆட்சேபம்

இந்த மனு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பெருநகர குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர் ஆஜராகி, ‘‘கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மனுதாரர் பேசியுள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, மனுதாரர் தனது முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை தெளிவாக குறிப்பிடவில்லை என்றும், புதிதாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியும் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x