Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

உ.பி.யில் 5 நகரங்களில் ஊரடங்கு அமல் இல்லை : உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைப்பு

நாடு முழுவதும் கரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி பதிவானது.

இதையடுத்து, பெருந்தொற்று விவகாரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கரோனா பரவல் விஷயத்தில் உத்தரபிரதேச அரசுமிக அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய நீதிமன்றம், லக்னோ, பிரயாக்ராஜ், கோரக்பூர், கான்பூர், வாரணாசி ஆகிய 5 நகரங்களில் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 5 நகரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்தனர்.

மேலும், மாநிலத்தில் கரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்த உத்தரபிரதேச அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x