Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
மதிப்பெண் கணக்கீட்டு முறை சிக்கலால், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான பொதுத் தேர்வை நடத்துவது பற்றி பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
அதேநேரம், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் குழப்பம் நிலவுவதால் மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நோய் பரவல் அச்சத்தால் 9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி செய்யப்படுவர். அதேநேரம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு இந்த மதிப்பெண் அவசியம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதனால் மாணவர்களுக்கு மாநில அளவிலோ, பள்ளிகள் அளவிலோ தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி 5 பாடங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வு, கொள்குறி வடிவ வினாத்தாள் (அப்ஜெக்டிவ்) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்வெழுத விருப்பமில்லாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.
இதுதொடர்பாக நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பரிந்துரையின்படி தமிழக அரசின் ஒப்புதல் பெற்று அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT