Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

தமிழகத்தில் தொற்று 11 ஆயிரத்தை நெருங்கியது : இளம்பெண், முதியவர்கள் உட்பட 44 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் இளம்பெண், முதியவர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர்

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 6,572, பெண்கள் 4,369 என மொத்தம் 10,941 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,347, செங்கல்பட்டில் 970,கோவையில் 735, திருவள்ளூரில் 535 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 2,392 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் இளம்பெண், முதியவர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,415 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 86,569, கோவையில் 68,137, செங்கல்பட்டில் 66,480,திருவள்ளூரில் 51,603 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக1 லட்சத்து 11,590 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x