Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு யோகா பயிற்சி, நேற்று முதல் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை, கோவை, சேலம், மதுரை, வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இங்கு விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என பல ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பரவி வரும் இச்சூழலில், சிறைகளில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறைத் துறை நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கைதிகளின் உடல் நலத்தை மேம்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் கைதிகளுக்கும், சிறைகளில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் தமிழக அரசின் ஒப்புதலுடன், ஈஷா யோகா மையத்துடன் சிறைத் துறை நிர்வாகத்தினர் இணைந்து கைதிகளுக்கு யோகா பயிற்சியை நேற்று முதல் அளித்து வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்தம் 18 சிறைகளில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.
இதுதொடர்பாக கோவை சரக சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘சிறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வரும் சூழலில், கைதிகளின் உடல்நலத்தை மேம்படுத்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கைதிகள் மட்டுமின்றி, சிறைக் காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT