Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கோவை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி சரிவு :

அதிக சரக்கு கட்டணம் வசூல் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் போட்டி காரணமாக கோவை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.

இதுதொடர்பாக விமான நிலைய சரக்குப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் சர்வதேச போக்குவரத்து பிரிவில் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் அதிக பயணிகளுடன் செல்கிறது. இதில் சராசரியாக ஒவ்வொரு முறையும் இரண்டரை டன் சரக்கு ஏற்றிச் செல்லப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக, சரக்கு முன்பதிவு செய்யப்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அதிகபட்சமாக ஒன்றரை டன் சரக்கு மட்டுமே ஏற்றிச் செல்லப்படுகிறது.

கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுவது குறைந்து, திருச்சி விமான நிலையம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் கொண்டுசெல்லப்படுகின்றன. அதிக சர்வதேச விமானங்கள் திருச்சியில் இருந்து இயக்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். அங்கிருந்து தினமும் சிங்கப்பூர் சார்ஜா, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கோவை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானம் மட்டுமே தற்போது சர்வதேச பிரிவில் இயக்கப்படுகிறது.

இதுதவிர, சரக்குகள் அனுப்புவதற்கு கோவையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் கட்டணம் குறைவு. இதுவும் சரக்கு போக்குவரத்து சரிவடைந்து வருவதற்கு முக்கிய காரணம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேலும் பல நாடுகளுக்கு புதிதாக விமான சேவையைத் தொடங்க வேண்டும். இதுதவிர சரக்குகள் ஏற்ற வசூலிக்கப்படும் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டப் பணியை விரைவுப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் மட்டுமே கோவை சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் நாட்களில் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x