Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

தமிழகத்தில் 3 நாட்களில் - 4.92 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற ‘தடுப்பூசி திருவிழா’வில் 4.92 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ்பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி பல்வேறு மாநிலங்களில் ‘தடுப்பூசி திருவிழா’ நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ‘தடுப்பூசி திருவிழா’ கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 3 நாட்களும் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மினிகிளினிக்குகள் என 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

‘தடுப்பூசி திருவிழா’வின் போது தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. அதன்படி, 14-ம் தேதி 73,633 பேருக்கும், 15-ம் தேதி 2,17,666 பேருக்கும், 16-ம் தேதி 2,01,495 பேருக்கும் என மொத்தம் 4,92,794பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

‘தடுப்பூசி திருவிழா’ நிறைவடைந்தாலும் அனைத்து மையங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். அரசு அனுமதித்துள்ள வயதினர் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x