Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் - மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைப்பு : சராசரியாக காருக்கு 20 முதல் 30 யூனிட் தேவை; 350-400 கி.மீ. வரை பயணிக்கலாம்

வாகனங்களுக்கான எரிபொருளான எண்ணெய் வளம் குறைந்துவரும் நிலையில், அதனால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்தமின்சார வாகனங்களுக்கு மாற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மாசுபடுத்தாத, சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் சத்தமில்லாத, நவீனமான புதிய தலைமுறை மின்சார வாகனங்களை வாங்க மக்கள் விரும்புகிறார்கள். 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க, மின்சார வாகனஉற்பத்தி மற்றும் பயன்பாடு திட்டத்துக்காக (எப்.எ.எம்.இ.) மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டிலுள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை யில், ஆடம்பர கார்கள் 12 சதவீதம், இருசக்கர வாகனங்கள் 70 சதவீதம், மூன்று சக்கர ஆட்டோக்கள் சுமார் 25 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்திய சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 0.06% ஆகும். 2020-ம் ஆண்டு நாட்டில் 1,52,000 மின்சார இருசக்கர வாகனங்களும், 3400 கார்களும், 600 பேருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முக்கியப் பிரச்சினை

மின்சார வாகனங்களிலுள்ள முக்கியப் பிரச்சினை சார்ஜிங் மையங்கள். சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே சார்ஜிங் மையங்கள் போதுமான அளவு இல்லாததால், சிறிய நகரங்களில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்வது பெரும் சவாலானது. பிற நாடுகளில், மின்சார வாகனங்களில் நிலையான பேட்டரிகள் பொருத்தப்பட்டு, அவற்றை ஒரு நிலையான சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்கிறார்கள். ஆனால், இங்கு மாற்றத்தக்க பேட்டரி முறையால் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு யூனிட்டுக்கு ரூ.19 கட்டணம்

இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கான முதல் சார்ஜிங் மையம், நீலகிரி மாவட்டம் உதகை ஜெம் பார்க் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலாளர் பிரதீப் கூறும்போது, "உதகை பிரபல சுற்றுலா தலம் என்பதால், பல மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்கள் ஹோட்டலில் தங்கும் பலர் மின்சார வாகனங்களில் வருகின்றனர். மின்சார வாகனங்களின்பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதற்கு சார்ஜ் செய்ய சார்ஜிங்மையம் அமைக்கப்பட்டது. ஒரு யூனிட்டுக்கு ரூ.19 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு காருக்கு சராசரியாக 20 முதல் 30 யூனிட் சார்ஜ் செய்ய வேண்டும். அதன்மூலமாக 350-400 கி.மீ. பயணம் செய்யலாம். இங்கு யார் வேண்டு மானாலும் தங்கள் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x