Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் இரு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து திருப்பூர் நோக்கி லாரி ஒன்று பனியன் துணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. நேற்று காலை இந்த லாரி தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. லாரியை ஹைதராபாத்தைச் சேர்ந்த முக்தா அலி என்பவர் ஓட்டிச் சென்றார். தொப்பூர் கணவாயில் ஆஞ்சநேயர் கோயிலைக் கடந்து சென்றபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியது.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கிரானைட் கற்பாளங்கள் பாரம் ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி சென்ற டிரெய்லர் லாரி ரெட்டைப்பாலம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பனியன் துணி ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் முக்தா அலிக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினரும், குறிஞ்சி நகர் சுங்கச் சாவடி பணியாளர்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணிகளால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து மாற்று மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரடைந்தது. விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT