Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில்சித்திரைத் திருவிழா கொடியேற்றம் :

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மானாமதுரை வைகை கரை யோரத்தில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத பரமேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். கரோனா தொற்றால் கடந்த ஆண்டைப் போல, இந்தாண்டும் விழாவுக்கு அரசு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.

இதையடுத்து நேற்று கோயிலில் கரோனா கட்டுப்பாடுடன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சோமநாத பரமேஸ்வரர் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அங்கு எழுந்தருளிய ஆனந்த வல்லி அம்மன், சோமநாத பரமேஸ் வரருக்கு ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. இதில் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான எஸ்.நாகராஜன் உள்ளிட்ட குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மனும், சோமநாத பரமேஸ்வரர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கும். ஏப்.24-ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மண்டகப் படிதாரர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x