Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

இணைய வழியில் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு படிக்க மாணவர்களுக்கு பயிற்சி :

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இணைய வழியில் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகளை படித்து அறிந்துகொள்ளும் பயிற்சியை, ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து 5 நாட்கள் நடத்தின. பயிற்சியில், மலைக் குகைகளில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டின் படங்கள் மூலம் பழமையான எழுத்துகளை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மகளிர், சேதுபதி கல்லூரி, பரமக்குடி, திருவாடானை அரசு கல்லூரிகள், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 40 பேர் இப்பயிற்சியில் கலந்துகொண்டு கல்வெட்டுகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி பெற்றனர்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் வி.சிவகுமார் செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x