Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களைவிட கரோனா பரிசோதனை, சிகிச்சையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது: தொற்றை கண்காணிக்கும் மருத்துவர்கள் தகவல்

கரோனா பரிசோதனை, சிகிச்சை அளிப்பதில் மகாராஷ்டிரா, டெல்லி,கேரளாவைவிட தமிழகம் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைத்து பயணிகளை பரிசோதனை செய்வது, மாநில எல்லைகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.

தொடர்ந்து திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த அனுமதி, பேருந்துகளில் மக்கள் நின்றுகொண்டு பயணிக்க தடை, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என்பன உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.

இதேபோல், கரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகளும், படுக்கைகளுடன் கூடிய கண்காணிப்புமையங்களும் ஏற்படுத்தப்பட்டன.தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோன்ற தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் தொற்று பரவல் குறைவாக இருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கரோனா பாதிப்பு குறித்து பல்வேறு மாநிலங்களை கண்காணிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது:

மற்ற மாநிலங்களில் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்குச் சென்றால் கரோனா பரிசோதனையோ,சிகிச்சையோ அளிப்பதில்லை. மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிடுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரையும் கண்டறிந்து பரிசோதனை செய்வதில்லை. கரோனா தொற்றின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படுகின்றன.

ஆனால், தமிழகத்தில் அறிகுறிகளுடன் சென்றால் உடனே பரிசோதனை செய்யப்படுகிறது. நுரையீரல் பாதிப்பை கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தொற்று உறுதியானால் அவர்களை உடனே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. தொடர் கண்டறிதல் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தொற்று தாக்கத்தின் அடிப்படையில் உரிய இடங்களை தேர்வுசெய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.போதிய அளவு ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படின் வெண்ட்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் விரைவாக அளிக்கப்படுகின்றன. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலையில் தினமும் 90 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கரோனா பரிசோதனை,சிகிச்சைகள் குறித்து மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x