Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்கியது : முதல் நாளில் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் பிளஸ் 2வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கின.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரைநடக்க உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளிகளில் 28 வகையான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றியும்தேர்வுகளில் பங்கேற்றனர். கரோனா விதிகளைப் பின்பற்றி தேர்வு நடைபெறுகிறதா என்று பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுகள் சுமுகமாக நடந்து வருகின்றன. கரோனா பரவல் காரணமாக இயற்பியல், வேதியியல் செய்முறைத் தேர்வுகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வில் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். மற்ற மாணவர்களுக்கு வரும் நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x