Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

குடும்பத்தோடு வந்தார் மு.க. ஸ்டாலின் - கொடைக்கானலில் 4 நாள் ஓய்வு :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் நேற்று கொடைக்கானல் வந்தார். மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் இங்கு 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 2 தனி விமானங்களில் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். முதல் விமானத்தில் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன், பேத்திகள் என 8 பேர் பயணம் செய்தனர்.

2-வது விமானத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் பயணம் செய்தனர்.

மதுரை விமான நிலையம் வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து கார்கள் மூலமாக நேற்று மாலை கொடைக்கானல் வந்தனர். கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 9 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அங்கு தங்கினர். கொடைக்கானலில் 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

கொடைக்கானலில் தங்கிஉள்ள மு.க.ஸ்டாலினை கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, 2019-ல் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்தார். அப்போது ஏரிச்சாலையில் நடைபயிற்சி, ஏரியில் மனைவியுடன் படகு சவாரி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x