Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
ஆம்பூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேரும், மற்றொரு இடத்தில் சரக்கு ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் என மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி அரசுப் பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றது. அந்த பேருந்தை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (45) என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஆம்பூர் அடுத்த வடப்புதுப்பட்டு அருகே அரசுப் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஆம்பூர் நோக்கி சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, பேருந்தை முந்திச்செல்ல முயன்றது.
அப்போது, எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து லாரி மீது மோதியது. இதில், பேருந்து ஓட்டுநர் ராமதாஸ் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஓட்டுநர் உட்பட 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் (40). இவர். ஆம்பூரில் இருந்து உடற்பயிற்சி நிலையத்துக்கு தேவையான உபகரணங்களை தனது சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு நோக்கி நேற்று மாலை சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு வெங்காய லோடு ஏற்றிய மினி லாரி கன்னிகாபுரம் சிக்னல் அருகே முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் படுகாயமடைந்தார். உடனே, அவர் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT