Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

‘பி.ஏ.எல்.’ பரிசோதனையை எப்படிச் செய்கிறார்கள்? :

‘பி.ஏ.எல்.’ (Bronchoalveolar Lavage - BAL) பரிசோதனை ‘பிராங்காஸ்கோப்’ எனும் கருவியின் உதவியுடன் செய்யப்படுவது. நுரையீரலின் உள்ளமைப்பை நேரடியாகப் பார்த்து அங்குள்ள பாதிப்புகளைக் கணிக்கும் உள்ளார்ந்த பரிசோதனை இது. நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் நோய்களுக்கு சிகிச்சை தரவும் திசுப் பரிசோதனைக்கும் (Biopsy) இது மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிக்கு மயக்கம் கொடுத்து, அவரது தொண்டை வழியாக மூச்சுக் குழலுக்குள் ‘பிராங்காஸ்கோப்’ கருவியை நுழைப்பார்கள்.

அதில் நுரையீரலுக்குள் சில திரவங்களைச் செலுத்த ஒரு குழாய் இருக்கும். அதன் உள் முனையில் ஒரு கேமராவும் ஒளி தரும் கருவியும் இருக்கும். அந்த வெளிச்சத்தில் நுரையீரல் நல சிறப்பு மருத்துவர், நுரையீரலின் உள் பகுதிகளைப் பார்த்துக்கொண்டு திசுப் பரப்புகளைக் கழுவுவது, சளியை வெளியில் எடுப்பது, அடைப்புகளை நீக்குவது, கட்டிகளை அகற்றுவது, ரத்தக் கசிவைச் சீராக்குவது போன்ற பணிகளை வெளியில் இருந்தே மேற்கொள்வார். இது பொதுவானது.

கரோனா பரிசோதனையில் ‘பிராங்காஸ்கோப்’ கருவி நுரையீரலுக்குள் நுழைந்ததும், மருத்துவர் சிறிதளவு சலைன் திரவத்தை உள்ளே பீய்ச்சுவார். அங்கு சளி சேர்ந்துள்ள திசுப் பரப்புகளை அது கழுவும். அப்படிக் கழுவிய சளி திரவத்தை உறிஞ்சி எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார். அதில் கரோனா கிருமிகள் இருப்பது தெரியும். இம்மாதிரியாக கரோனா தொற்று உறுதி செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x