Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா வைரஸ் - ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது : கடந்த 10 நாட்களில் மட்டும் இரு மடங்காக உயர்ந்த தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வைரஸ் பாதிப்புக்கு மேலும் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு இறுதியில் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி முதல் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. அப்போதுகூட தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குள்தான் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வந்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று பரவல் தொடங்கியது முதலாக, இந்தியாவில் பதிவான தினசரி தொற்று எண்ணிக்கையில் இதுவே அதிகபட்ச அளவாகும். அதுமட்டுமின்றி, கடந்த 5-ம் தேதி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருந்தது. தற்போது இது இரு மடங்காக அதிகரித்துள்ளது. 10 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, வைரஸ் வேகமாக பரவி வருவதை உணர்த் துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

வியாழக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,038 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண் ணிக்கை 1 லட்சத்து 73,123 ஆக உயர்ந்துள் ளது. ஒரேநாளில் 39,624 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 6.12 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில் நேற்று 58,852 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 22,439, டெல்லியில் 17,282, சத்தீஸ்கரில் 15,120, கேரளாவில் 8,778, கர்நாடகாவில் 8,155 பேர் என்ற அள வில் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதனிடையே, வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட 20 மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. முத லிடத்தில் மகாராஷ்டிராவும் அடுத்தடுத்த இடங்களில் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் என்னென்ன?

கொல்கத்தா: கரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இதுதொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது:

முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2-வது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக உள்ளன.

முதல் அலையைவிட தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. கடந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதிகம் தென்படுவது இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமே வைரஸ் அறிகுறிகள் அதிகமாக உள்ளன. கடந்த முறை காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் கரோனா வைரஸை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த முறை இளைஞர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாததால் வைரஸ் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் எழுகிறது.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில மருத்துவர்கள் கூறியதாவது:

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோயாளி குணமடைந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் சி.டி. ஸ்கேனில் அவர்களின் நுரையீரலில் 80 சதவீதம் அளவுக்கு தொற்று இருப்பது தெரிய வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை காணப்படுகிறது.

எனவே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் நோயாளிகளை தனிமையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x