Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM
கல்பாக்கம் நகரியப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கல்பாக்கம் நகரியப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய வளாகம், அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மைப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், தொடர்ந்து புதுப்பட்டினம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT