Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM
மேற்கு வங்கத்தில் 5-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு வரும் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 21 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான தனித் தொகுதிகள் ஆகும். நாட்டில் உ.பி.யை தொடர்ந்து, எஸ்சி சமூகத்தினர் அதிகம் வாழும் இரண்டாவது மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. இங்கு எஸ்சி சமூகத்தினர் 23.51 சதவீதம் பேரும் எஸ்டி சமூகத்தினர் 5.8 சதவீதம் பேரும் உள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 84 தொகுதிகள் இவ்விரு சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹூக்ளி மாவட்டம், ஆரம்பாக் தொகுதியில் திரிணமூல் சார்பில் போட்டியிடும் சுஜாதா மோண்டல் தனது தொகுதியில் உள்ள எஸ்சி சமூகத்தினர் பாஜகவிடம் விலை போய்விட்டதாக கடந்த வாரம் குற்றம் சாட்டினார். அப்போது அவர் எஸ்சி சமூகத்தினரை பிச்சைக்காரர்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில், “மம்தாவின் ஆட்கள் எஸ்சி சமூகத்தினரை வசை பாடுகின்றனர். அவர்களை பிச்சைக்காரர்கள் என அழைத்துள்ளனர். அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முன், அவரை திரிணமூல் கட்சியினர் அவமதித்துள்ளனர்” என்றார்.
இந்நிலையில் ஜோதிர்மாய் சிங் மகதோ நேற்று கூறும்போது, “சுஜாதா மோண்டலின் பேச்சு மூலம், எஸ்சி சமூகத்தினருக்கு எதிரான திரிணமூல் கட்சியின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது. இதற்கு வரும் தேர்தலில் அக்கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். கடந்த சனிக்கிழமை 4-ம் கட்ட வாக்குப் பதிவின் போது சிடால்குச்சி தொகுயில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல்வர் மம்தா மவுனம் காத்து வருவது ஏன்?” என்றார்.
இதனிடையே தேர்தலுக்காக இந்த விவகாரத்தை பாஜக பெரிதுபடுத்துவதாக சுஜாதா மோண்டல் பதில் அளித்துள்ளார். “ஆரம்பாக் தொகுதியில் என்னையோ மேற்கு வங்கத்தில் மம்தாவையோ வீழ்த்த முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். எனவே இதுபோன்ற பிரச்சாரத்தில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT