Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

சினிமாவால் சாதிவெறி தூண்டப்படுகிறதோ? : அச்சம் நிலவுவதாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கருத்து

சென்னை

சினிமாவால் சாதிவெறி தூண்டப்படுகிறதோ என்கிற அச்சம் நிலவுகிறது என திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதை சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீத மானியத்துடன் உணவு, தங்கும் வசதி வழங்கப்படும்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாதிக் கலவரங்களை நேரில் பார்த்தவன் நான். சமீபகால தமிழ் படங்களில் சாதியைப் பேசுவது அதிகமாக உள்ளது. ‘அசுரன்’, ‘திரௌபதி’, ‘கர்ணன்’, ‘ருத்ர தாண்டவம்’ என அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. சினிமாவால் சாதிவெறி தூண்டப்படுகிறதோ என்கிற அச்சம் நிலவுகிறது. இந்த போக்கு சரியா?

ஒவ்வொருவருக்கும் அவரவரின் கதையைச் சொல்லும் உரிமை இருக்கிறது. எல்லாவிதமான கதைகளுமே சொல்லப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது. அதைப் பேசாமல் இருப்பதால் சமூகத்திலும் அது இல்லை என்று ஆகிவிடாது. பேசப்பட்டு விவாதத்தை உருவாக்கும்போது அது நல்ல விஷயம் என்றே நான் நினைக்கிறேன்.

பாதிக்கப்படுவது தென், வட மாவட்டத்து மக்கள்தான். இரண்டு தரப்பிலும் பற்ற வைத்தால் எளிதில் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வு தேவை இல்லையா?

குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் சொல்கிறேன். பொறுப்பு இல்லாமல் இதுபோன்ற கதைகளை கையாளவே முடியாது. இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x