Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

‘நூல் விலையேற்றத்தை நூற்பாலைகள் தவிர்க்க வேண்டும்’ :

நூல் விலையேற்றத்தை நூற் பாலைகள் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல், அனைத்து நூற்பாலைகளுக்கும் நேற்று அனுப்பிய கடிதத்தில், "கடந்த நான்கு மாதங்களாக நூல் விலையின் அபரிமிதமான ஏற்றம், எங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நூற்பாலைகள் நஷ்டத்தை எதிர்கொண்டு, தற்போது நிலைமை மாறுபட்டு லாபகரமாக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில், இதனை சார்ந்திருக்கும் ஆயத்த ஆடை தொழில், நூல் விலை ஏற்றத்தால் மிகவும் சிரமத்தில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில், நாட்டிலுள்ள அனைத்து நூற்பாலை சங்கங்கள் கலந்துகொண்டு, வரும் ஏப்ரல் முதல் நூல் விலை உயர்த்தப்படாது என உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு, எஸ்.எஸ்.எம். மில் உட்பட பல நூற்பாலைகள் விலையை உயர்த்தவில்லை. இருப்பினும், அதற்கு மாறாக சில நூற்பாலைகள் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த விலையேற்றத்தால் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஆர்டர்களை செய்ய முடியாத நிலையும், பெரும் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக நாட்டைவிட்டே பையர்கள் வெளியேறும் சூழ்நிலையும் ஏற்படும். இந்நிலை ஏற்பட்டால் மதிப்பு சங்கிலி என்ற முறையில், ஏற்றுமதியை சார்ந்துள்ள அனைத்துத் தொழில்களும் நலிவடையும். இதை கருத்தில்கொண்டு, எங்கள் ஆடை ஏற்றுமதி தொழிலை மீண்டும் வளர்த்தெடுக்கவும், இரண்டு தொழில்களுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகவும், நூற்பாலைகள் நூல் விலை ஏற்றத்தை தவிர்த்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x