Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் முருகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பூரில் 400 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு மையங்களை அமைத்து இயங்குகின்றன.
இதுதவிர, 100 தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய சாய ஆலைகளும் உள்ளன. பூஜ்ய நிலை சுத்திகரிப்பு (ஜீரோ டிஸ்சார்ஜ்) தொழில்நுட்பத்தில் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
சாய நீரில் இருந்து 90 சதவீதம் தண்ணீர் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் சாயமேற்றுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. பிரித்தெடுக்கப்படும் உப்புக்கரைசலும் சாயமேற்ற பயன்படுகிறது.
தினமும் 10 கோடி லிட்டர் மறுசுழற்சி முறையில் சாய ஆலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் தண்ணீர்கூட வெளியேற்றப்படுவதில்லை. இந்த சுத்திகரிப்பு திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் என்பது உலக அளவில் தோல்வி அடைந்த திட்டம்; சுற்றுச்சூழலை சீரழிப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது’ என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தையும், உண்மை தன்மையையும் அறிய ராமதாஸ் திருப்பூருக்கு வந்து பார்வையிடலாம். திருப்பூர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை பல்வேறு வெளிநாட்டினர் வியந்து பார்வையிட்டு சென்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT