Last Updated : 12 Apr, 2021 03:18 AM

 

Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

பாஜகவுக்கு சவாலாகி விட்ட உ.பி. பஞ்சாயத்து தேர்தல் : தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்

உத்தர பிரதேசத்தில் பஞ் சாயத்து தேர்தலை பெரும் சவாலாக கருதுகிறது பாஜக. உத்தர பிரதேசத்தில் நகர்ப்புறக் கட்சியாகவே பாஜக கருதப்படுவதால் கிராமப்புறங்களில் தனது எதிர்க் கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்டோரின் செல்வாக்கை வீழ்த்த வேண்டி உள்ளது.

இதற்காக தற்போது கிராமந் தோறும் மூத்த தலைவர்களை ஏஜென்டுகளாக நியமித்துள்ளது பாஜக. இதற்கிடையில், டெல்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டமும் பாஜகவை பயமுறுத்தி உள்ளது. போராட்ட விவசாயிகள் உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு எதிராக மஹா பஞ்சாயத்துக்களை நடத்தி பிரச்சாரத்தை துவக்கி விட்டனர்.

உத்தர பிரதேசத்தின் முக்கியஎதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் மாநிலம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை துவக்கிவிட்டார். இப்பிரச்சாரத்தில் பல்வேறு பகுதிகளில் இரவிலும் அகிலேஷ் தங்கி பொதுமக்களின் செல்வாக்கை பெறும் முயற்சியில் உள்ளார்.

இவற்றில் இந்துக்களின்கோயில்கள், முஸ்லிம்களின் தர்காக்கள் மற்றும் புத்தசமயத் தினரின் புனிதத்தலங்கள் என அனைத்திலும் தவறாமல் வழிபாடுகளையும் நடத்து கிறார்.

இக்கூட்டங்களின் மூலம் 2022-ம்ஆண்டு சட்டப்பேரவை தேர் தலையும் குறி வைத்துள்ள அகிலேஷ், ஆங்காங்கே சைக்கிள் யாத்திரைகளும் நடத்தி வருகிறார்.

மற்றொரு எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதியும் தனது நேரடி கவனத்தை பஞ்சாயத்து தேர்தலில் செலுத்தி வருகிறார். தனது முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் தலைமையில் கிராமந்தோறும் குழுக்களை அமைத்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் தன் முக்கிய எதிரியான சமாஜ்வாதியுடன் பகுஜன் கூட்டணி அமைத்தது. இதில் மாயாவதிக்கு சமாஜ் வாதியை விட அதிகமாக 10 தொகுதிகள் கிடைத்தன. இதனால், இந்தமுறை உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டி 2022 சட்டப்பேரவை தேர்தலில் வெல்ல மாயாவதி முனைப்பு காட்டுகிறார்.

உத்தரபிரதேசத்தில் தனது சரிவு நிலையை சமாளிக்க காங்கிரஸ் பிரியங்கா வத்ராவை கடந்த 2019 மக்களவை தேர்தலில் இறக்கி இருந்தது. இம்மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளரான பிரியங்கா, பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டுகிறார்.

இதற்காக, போராடும் விவசாயிகள் நடத்தி வரும் மஹாபஞ்சாயத்து கூட்டங்களிலும் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார். ஏப்ரல் 15 முதல் நான்கு கட்டங்களாக நடைபெறவிருக்கும் உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மே 2-ல் வெளியாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x