Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

கரோனா 2-வது அலை பரவலால் - திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை : பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, திண்டுக்கல் நகர் மத்தியில் அண்ணா வணிக வளாக மாடியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மார்க்கெட் அதிகாலை முதல் இரவு வரை செயல்பட்டு வந்தது.

ஆனால், தற்போது கரோனா 2-வது அலையால் பூ மார்க்கெட் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரைதான் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பூ மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில்லரை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது, பூ மார்க்கெட் மூடப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x