Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் - கரோனா தொற்று புதிய நோயாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்வு : சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனா புதிய நோயாளிகள் எண்ணிக்கை 1,45,384 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 4-வது நாளாக 1 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் புதிய நோயாளிகள் எண்ணிக்கையில் புதிய உச்சமாகும்.

நாட்டில் கரோனா தொற்றுக்கு கிசிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. மிகவும்பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 58,993பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 32.8 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 794 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,68,436 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும்6.16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 9.78 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி விநியோகம் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என மத்தியஅரசு தொடர்ந்து உறுதி அளித்துவந்தாலும் பல மாநிலங்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கின்றன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்று முதல் தொடங்கியது.

டெல்லியில் பள்ளிகள் மூடல்

டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிவித்தார். கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் 7 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு ஏப்ரல் 20 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ம.பி.யிலும் சில நகரங்களில் நாளை வரை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 29.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x