Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பதுதொடர்பாக அந்தந்த அரசு அலுவலகங்களே முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு,திருவள்ளுவர், அண்ணாதுரை, ராஜாஜி, பெரியார் புகைப்படங்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களையும் வைக்க 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘1990-ம் ஆண்டு அம்பேத்கர் படமும் 2006-ல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி,காயிதே மில்லத், இந்திரா காந்தி,முன்னாள் முதல்வர்கள், இந்நாள்முதல்வர், தமிழன்னை புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து தமிழக அரசு சார்பில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன' என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி,தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், இந்த படங்களை கண்டிப்பாக வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றார்.
அதையடுத்து நீதிபதிகள்,‘‘தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை வைப்பது தொடர்பாகஅந்தந்த அரசு அலுவலகங்களேமுடிவெடுக்க வேண்டும்’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT