Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் : கரோனா பரவலை தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுரை

திருச்சி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள் ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்துப் பேசியது: திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 19 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவமனையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட படுக்கை வசதிகளை இந்த மருத்துவமனைகள் தொடர்ந்து கடை்பிடிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை அனுமதிப்பது குறித்தும், அதன்பின் சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் 160 படுக்கைகளையும், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் 500 படுக்கைகளையும் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 4,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் வெளியே செல்லும் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை 2 வாரங்களுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவம்) லட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கரோனா பரவல் தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, சார் ஆட்சியர்கள் ஜோதிசர்மா (முசிறி), விஷ்ணு மகா ராஜன் (ரங்கம்), மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x