Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழகஅரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத் துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பணி அனுபவம் இல்லை
இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய பணி அனுபவம் இல்லை என்பதால் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரிபூவுலகின் நண்பர்கள் அமைப்புசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப் பிரிவுகளின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படும் நபர் 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணியிலும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழல் துறை சார்ந்த பணி அனுபவம் குறைவாகவே உள்ளது. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன், ஏப்.19-ம் தேதிதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டில் முகாந்திரம்
அதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரரின் குற்றச்சாட்டில் உரிய முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. சுற்றுச்சூழல் துறைசார்ந்த அனுபவத்தில் சட்டப்படியான அடிப்படைத் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்பதால் அவரைஇப்பதவிக்கு நியமித்து மத்தியஅரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்குஇடைக்கால தடை விதிக்கப்படுகிறது.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதில்அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT