Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வலியுறுத்தல்

புதிய அரசு அமையும் வரை தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின்: அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தேர்தல் நேரத்தில் நடைபெற்றமோதல், இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கும், யாராலும் பொது அமைதிக்குப் பங்கும் விளைந்து, பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது.

கே.எஸ்.அழகிரி: அரக்கோணம் கொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். தேர்தல் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: குற்றவாளிகளைக் காவல்துறையினர் உடனே கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சாதி, மத வெறி மோதல்களுக்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் ஆர்.நல்லகண்ணு: குற்றவாளிகள் யாராக இருப்பினும் உடனடியாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசு உரிய சட்ட பாதுகாப்பு,உயிர் பாதுகாப்பும் வழங்கி உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x