Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

மண்டபங்களின் அளவுக்கேற்ப - திருமணத்தில் 50% பேர் பங்கேற்க அனுமதி தேவை : அரசுக்கு கல்யாண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை

திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதற்கு பதிலாக, மண்டப அளவுக்கேற்ப 50 சதவீதம் பேர் வரை பங்கேற்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கல்யாண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜான் அமல்ராஜ், துணை தலைவர் சந்திரன் ஆகியோர் நேற்று கூறியதாவது:

பொது ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த திருமணங்கள் தடைபட்டன. அரசின் உத்தரவை ஏற்று திருமணங்களுக்கு மாற்று தேதி வழங்கினோம். தேதியை மாற்றம் செய்ய முடியாதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகையை திருப்பிக் கொடுத்தோம்.

கடந்த ஆண்டு கரோனா காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் திருமணங்கள் நடைபெறவில்லை. இதனால், கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது. திருமண மண்டபம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிகவும்மோசமான பாதிப்பை சந்தித்தனர்.

ஓராண்டுக்கு பிறகு திருமண நிகழ்ச்சிகளை நடத்த மக்கள் தயாராகி வரும் சூழலில், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மற்ற துறைகளுக்கு வழங்கியதுபோல மண்டபத்தின் அளவுக்கேற்ப 50 சதவீதம் பேர் பங்கேற்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

அதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மண்டப உரிமையாளர்கள் வழங்குவார்கள். திருமண மண்டபத்துக்கான நிலையான இயக்க நடைமுறையை அரசு வழங்கினால், அதை கடைபிடித்து திருமண நிகழ்வுகளை நடத்த தயாராக உள்ளோம். இதுதொடர்பாக, தலைமைச் செயலரை சந்தித்து முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x