Last Updated : 09 Apr, 2021 03:12 AM

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம் : மும்பை - பெங்களூரு அணிகள் முதல் ஆட்டத்தில் மோதல்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங் களூரு அணியை எதிர்கொள்கிறது.

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவடைந்த 5 மாத இடைவெளியில் இந்த ஆண்டுக் கான போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதிலும் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் இல்லாத பூட்டிய அரங்கிற்குள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் டி-20 தொடர் முக்கியத்துவம் பெற் றுள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான மும்பை, பெங்களூரு அணியை சந்திக்கிறது. ஐபிஎல் அரங்கில் வெற்றிகரமாக வலம் வரக்கூடிய ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக் வெற்றிகமாக செயல்படக் கூடியவர்கள்.

இவர்கள் சிறப்பாக செயல்பட தவறும்பட்சத்தில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் எதிரணியை பதம் பார்க்கக்கூடியவர்களாக உருவெடுக்கும் திறன் கொண்ட வர்கள். அதேபோல் ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா ஆகியோர் நடு வரிசையில் மிரட்டக்கூடியவர்கள்.

பீல்டிங்கில் எல்லைக்கோடு அருகே அசாத்தியமாக செயல்படும் கெய்ரன் பொலார்டு சென்னை ஆடுகளத்துக்கு தகுந்தபடியான தனது பந்து வீச்சால் பலம் சேர்க்கக்கூடும். டிரெண்ட் போல்ட் டின் ஸ்விங், ஜஸ்பிரீத் பும்ராவின் யார்க்கர், ராகுல் சாஹரின் கூக்ளி எதிரணியின் பேட்ஸ்மேன்களை சோதனைக்கு உட்படுத்தக் கூடும்.

பெங்களூரு அணியை பொறுத்தவரையில் கோப்பையை முதல்முறையாக கைகளில் ஏந்தவேண்டும் என்ற அந்த அணியின்ஏக்கத்தை தீர்க்க கேப்டன் விராட் கோலி இம்முறை கூடுதல்முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும். ஆனால் அணியின் அமைப்பு மிக உயர்ந்த நம்பிக்கையைத் தூண்டவில்லை.

ஐபிஎல் தொடரில் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத கிளென் மேக்ஸ்வெல், இந்திய ஆடுகளங்களில் அனுபவம் இல்லாத நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சில் யுவேந்திர சாஹல் பார்மில் இல்லை. மொகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை.

இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வருட தோல்விகளில் இருந்து மீண்டு எழுச்சி காண்பதில் கவனம் செலுத்தக்கூடும். இந்த சீசனில் அந்த அணி தனது வியூகங்களை மாற்றியமைக்க முயற்சி செய்யும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்தின் தலைமையில் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் இம்முறை கேப்டனாக களமிறங்குவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த தோனியின் சென்னை அணியை சந்திக்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ரஷீத் கான் போன்ற வெளிநாட்டு நட்சத்திர வீரர்களைக் கொண்டு சிறந்த போட்டியாளர்காக திகழ் கிறது.

கொல்கத்தா அணியானது வெள்ளை நிற பந்தில் புத்தி சாலித்தனமாக செயல்படக்கூடிய கேப்டன் இயன் மோர்கன் இம்முறை அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் களமிறங்குகிறது பஞ்சாப் அணி. பெயர் மாற்றத்தால் அணியின் அதிர்ஷ்டம் மாறுமா என்பது கேப்டன் கே.எல்.ராகுலின் செயல் திறனை பொறுத்தே சார்ந்திருக்கும்.

ராஜஸ்தான் அணி ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாததால் கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும். பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் போன்ற வெளிநாட்டு வீரர்களின் செயல்திறனை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x