Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பெரும்புதூரில் இன்று தொடங்குகிறது - ராமானுஜர் 1004-வது ஆண்டு அவதார உற்சவ விழா : யூடியூப்-பில் ஒளிபரப்ப பக்தர்கள் கோரிக்கை

பெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் கோயிலில் ராமானுஜர் 1004 -வது ஆண்டு அவதார உற்சவ விழாஇன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கரோனா தடையால் தொடர்ந்து நடைபெறுமா? என்ற சந்தேகம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் யூடியூப்-பில்நேரலையாக ஒளிபரப்பவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரும்புதூரில் 1017-ம்ஆண்டு அவதரித்தவர் வைணவமகான் ராமானுஜர். இவர் சமய,சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர். ராமானுஜரின் அவதாரத் தலமான பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தானுகந்த மேனியாக ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை, திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்களுக்கு விழா நடப்பது வழக்கம். இதில் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் பெரும்புதூர் வந்து வழிபடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு 1004-வதுஅவதார உற்சவ விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 10-ம் தேதி முதல் விழாக்கள் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, உற்சவவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் யூ டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த முறை ஊரடங்கு காரணமாக அவதார உற்சவ விழா நடைபெறவில்லை. மாறாக ராமானுஜரின் திருமஞ்சனம், சாற்றுமுறை விழா நடைபெற்றது. அது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் இந்த முறையும் ஒளிபரப்ப வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனையைக் கேட்டிருக்கிறோம். 10-ம் தேதி முதல் விழாக்கள் ரத்துஎன்பதால் 9-ம் தேதி வரை அனைத்து நிகழ்வுகளை நடத்தவும். 10-ம் தேதிக்குப் பிறகுகோயிலின் உள்ளேயே நிகழ்ச்சிநடத்தவும், மேலும் யூடியூப் சேனலில் ஒளிபரப்புவது குறித்தும்அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x