Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.20 முதல் ரூ.40 வரை நூற்பாலைகள் உயர்த்தி இருப்பது, திருப்பூர் தொழில்துறையினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை தயாரிப்பு, அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பனியன் தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இதனால் ஆர்டர்கள் பெறும்போது நூல் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாகவே நூல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால், தொழில்துறையினர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நூல் விலை உயர்வைக் கண்டித்து, பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, தங்களின் நிலையை வெளிப்படுத்தினர். இந்நிலையில், மீண்டும் நூல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், தொழில்துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "நூல் விலையை குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நடப்பு மாதத்துக்கான நூல் விலை பட்டியல், இதுவரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆனால், நூற்பாலைகள் கிலோவுக்கு மேலும் ரூ.20 முதல் ரூ.40 வரை விலையை உயர்த்தியுள்ளன. நூல் வியாபாரிகளிடம் விலையை உயர்த்தி கேட்டு வருகின்றனர். இவ்வாறு நூல் வியாபாரிகள் கூடுதலாக விலை கொடுத்து வாங்கும்போது, அந்த விலை உயர்வு தொழில் துறையினரிடம் பிரதிபலிக்கும். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி வந்தும், நூற்பாலைகள் மேலும் விலையை உயர்த்தி இருப்பது கவலையளிக்கிறது" என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT