Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
சேலம்: இளம்பிள்ளை அருகே பாமக நிர்வாகியை தாக்கிய பாமக தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை முருகன் நகரைச் சேர்ந்தவர் உமாபதி (37). இவர் தாரமங்கலம் ஒன்றிய பாமக விவசாய அணித் தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த இரு ஆண்டாக கட்சி பணியில் இருந்து விலகியிருந்தார்.
நேற்று முன்தினம் உமாபதி வீட்டுக்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் வீட்டை சூறையாடி உமாபதியை தாக்கினர். இதில், உமாபதி மற்றும் அவரது மனைவி பானுப்பிரியா ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், காக்காப்பாளையம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், உமாபதியிடம் பாமக தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை அலைபேசியில் பேசியதாகவும், அப்போது, திமுக-வுக்கு ஆதரவாக தேர்தலில் உமாபதி வேலை பார்த்ததாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவர் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் உமாபதி வீட்டுக்கு வந்து தாக்கியது தெரிந்தது.
இதையடுத்து, பாமக தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT