Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டைச் சேர்ந்தவர் முரளிதரன் (36). இவர். மண்ணாடிப்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.குமாரின் தீவிர ஆதரவாளர் ஆவார். நடந்து முடிந்த சட்டப்
பேரவை தேர்தலில் ஏ.கே.குமாருக்கு ஆதரவாக முரளிதரன் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முரளிதரன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது காரை,மண்ணாடிப்பட்டு மெயின்ரோட்டில் உள்ள வீட்டின் அருகே வழக்கம் போல் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நள்ளிரவு முரளிதரன் சகோதரர், அவ்வழியாக வந்தபோது தனது அண்ணனின் கார் தீப்பற்றி எரிவதை கண்டு கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
தகவல் அறிந்த திருக்கனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா, சப்இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து, காருக்கு தீ வைத்த விஷமிகளைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT