Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

சேலம் கோயில் நிலத்தை விற்பனை செய்ததாக வழக்கு - பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு :

சேலம் கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள புராதனமிக்க பெருமாள் கோயில் சிதைந்த நிலையில், சிலைகள் திருடப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வருவாய் துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் உடந்தையுடன் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே பெருமாள் கோயில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில், கோயில் நிர்வாகத்துக்கான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், அதன்பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எனவே இதுதொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும், என கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், சேலம் கோயில் நிலத்தின் தற்போதைய உரிமையாளர்களை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்யவும், ஒருவேளை அந்த நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டிருந்தால் தொடர்புடைய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை 3 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x