Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்க தீயணைப்புத் துறை ஆலோசனை :

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தினைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் தீயணைப்புத்துறை சார்பில் ஈரோட்டில் நடந்தது. கருத்தரங்கிற்கு தலைமை வகித்து, ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி பேசியதாவது:

இரண்டு தளங்களுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில், தானியங்கி தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த உபகரணங்களை பயன்படுத்த மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை, தீ தடுப்பான் கருவியை கொண்டு அணைக்க வேண்டும். தண்ணீரை கொண்டு அதனை அணைத்தால், மேலும் மின் கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

அதேபோல், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஜெனரேட்டரில் ஆயில் கசிவால் ஏற்படும் தீயை, தண்ணீரைக் கொண்டு அணைத்தால், தீ மேலும் பரவும். எனவே, தீ தடுப்பான் கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் உள்ளிட்ட தீயணைப்புத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x