Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் : சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் வலியுறுத்தல்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 4-ல் தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தசூழலில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் அல்லது இணையவழியில் நடத்த வேண்டும் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மத்திய அரசுக்கு மனுக்கள் அனுப்பி வலியுறுத்தினர். மேலும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அதேநேரம் திட்டமிட்டபடி பொதுத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை வாரியம் செய்துவருகிறது.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் கரோனா பரவல் மோசமாகி வருகிறது. எனவே, இந்தசூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்”என்றனர். தற்போது சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x