Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

வாக்கு எண்ணிக்கை மையங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் : அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை

வாக்கு எண்ணிக்கை மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுக என்ற இயக்கத்தைத் தொடங்கி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். எம்ஜிஆரின் அரசியல் வாரிசான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனதுஉடல்நலனையும் பொருட்படுத்தாமல், மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பலவரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தினார்.

இருபெரும் தலைவர்களின் நல்லாசியுடன், ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அந்த வகையில் அதிமுக அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன், திமுகவினரின் பல்வேறு முறைகேடுகளைத் தாண்டி, தமிழகத்தில் சுமுகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குகொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வரையிலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை மிகுந்த எச்சரிக்கை, விழிப்புடன் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x