Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தெற்கு ரயில்வேயிலும் ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை தெற்கு ரயில்வேயில் 70 சதவீத பாதுகாப்புப் படை வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரயில்வே பாதுகாப்புப் படையில் ஆரம்பத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது பெரும்பாலானோர் தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பி விட்டனர். 13 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்கு ரயில்வேயில் 70 சதவீதம் பாதுகாப்புப் படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 1,450 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர். இதில் 1,180 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என சென்னை ரயில்வே கோட்ட மூத்த பாதுகாப்புப் படை ஆணையர் செந்தில் குமரேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT