Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

நாகை, மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில் - 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயங்திரங்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் பி.நாயர் ஆய்வு

நாகை, மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில், 3 அடுக்கு பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று வைக்கப்பட்டு, சீல் வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் பி.நாயர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,861 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்றதும், மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து, நேற்று காலை அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வந்து சேர்ந்தவுடன், அவை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, முகவர்களின் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், நாகை ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆகிய கல்லூரி வளாகங்களில், முதல் அடுக்கில் உள்ளூர் போலீஸார், 2-வது அடுக்கில் ஆயுதப்படை பிரிவு போலீஸார், 3-வது அடுக்கில் துணை ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே வரும் முகவர்கள், அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அங்குள்ள பதிவேட்டில் தங்களின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்களை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் மின்சார கசிவு ஆகியவை ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறையினர், மின்சாரத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x