Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு :

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னி க்ஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மீதான இரட்டை கொலை வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களை தரக்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால் தான் என்னால் வழக்கை நடத்த முடியும். பொய் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நீக்கக்கோரிய மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை தரக்கோரியும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரியும் நான் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சக்திகுமார் சுகுமார் குரூப் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், சிபிஐ தரப்பின் ஆவணங்கள் இல்லாமல் வழக்கை எதிர்கொள்ள முடியவில்லை. மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஏப். 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x