Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
தருமபுரி மாவட்டம் ஏரிமலையில் நேற்று நான்கரை மணி நேர தாமதத்துக்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதியில் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமங்கள் ஏரிமலை மற்றும் அலகட்டு. அலகட்டு கிராமத்தில் 100 வாக்குகளும், ஏரிமலையில் 227 வாக்குகளும் உள்ளன.
இவ்விரு கிராமங்களுக்குமான 327 வாக்காளர்களுக்கும் ஏரிமலையில் வாக்குப் பதிவு மையம் அமைந்துள்ளது. இவ்விரு மலைக் கிராமங்களுக்கும் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. மலை அடிவாரங்களில் இருந்து வெவ்வேறு திசையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் இந்த கிராமங்களுக்கு பயணிக்க வேண்டும். இந்த கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததை கண்டித்து ஒரு வாரம் முன்பே தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஏரிமலை வாக்குப் பதிவு மையத்துக்கு வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கச் செல்லவில்லை. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலம், வனச் சரகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏரிமலை வாக்காளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கிராம மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த பின்னர் அந்த கிராம மக்கள் வாக்களிக்க ஒப்புக் கொண்டனர். 7 மணிக்கு மற்ற இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் ஏரிமலை வாக்குப்பதிவு மையத்தில் 11.30 மணிக்குத் தான் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் புறக்கணிப்பு பிரச்சினையால் நான்கரை மணி நேர தாமதத்துக்கு பின்னர் ஏரிமலையில் வாக்குப்பதிவு தொடங்கி பின்னர் சீராக வாக்குப்பதிவு நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT