Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 6 சட்டப்பேரவை தொகுதிகளில் எந்த அசம்பாவிதமும் இன்றி மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் தேர்தல் நேற்று நடந்தது.
இதில், அதிமுக, திமுக கூட்டணிகள் கட்சி சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 86 பேர் போட்டியிட்டனர். 6 தொகுதிகளிலும் 16 லட்சத்து 5 ஆயிரத்து 280 வாக்காளர்கள் வாக்களிக்க 2298 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி மையங்களில் சுகாதாரத்துறையினர் மூலம் வாக்காளர் களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை, கிருமி நாசினி, கையுறை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமப்புறங் களில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதிமுக வேட்பாளர்கள் வேப்பனப்பள்ளி தொகுதி கே.பி.முனுசாமி காவேரிப்பட்டணத் திலும், அசோக்குமார் கிருஷ்ணகிரியிலும், பர்கூர் தொகுதி கிருஷ்ணன், சின்னதளிஅள்ளியிலும், ஊத்தங்கரை தமிழ்செல்வம், சிவம்பட்டியிலும், ஓசூர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி பஸ்தியிலும், தளி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார், தளியிலும் வாக்களித்தனர்.
இதேபோல், திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், வெலகலஹள்ளி கிராமத்திலும், பர்கூர் மதியழகன் குட்டூர் கிராமத்திலும், வேப்பனப்பள்ளி முருகன் தளவாய்பள்ளியில், ஓசூர் பிரகாஷ், பேளகொண்டப் பள்ளியிலும் வாக்களித்தனர். தளி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வரகானப்பள்ளியில், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் மிட்டப்பள்ளியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. ஊத்தங்கரை தொகுதியில் 78.3 சதவீத, பர்கூரில் 79.21 சதவீத, கிருஷ்ணகிரியில் 78.5 சதவீத, வேப்பனப்பள்ளியில் 66 சதவீத, ஓசூரில் 70.21 சதவீத, தளியில் 73.37 சதவீத வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 74.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT