Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

காரைக்கால் மாவட்டத்தில் 76.64 சதவீதம் வாக்குப்பதிவு :

காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை 76.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,61,568 வாக்காளர்கள் உள்ளனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த எண்ணிக்கையை விட, தற்போது 71 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், கூட்ட நெருக்கடியின்றி மக்கள் விரைவாக வாக்களிக்க முடிந்தது.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட, கோயில்பத்து மார்க்கெட்டிங் சொசைட்டி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு அரை மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்டத்தில் மேலும் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான நிலையில், உடனடியாக மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. வயதானோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் பணியாற்றினர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, மாலையில் வாக்களித்தனர். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் நேற்று மாலை 6 மணி வரை 76.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x