Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
காரைக்கால் காரைக்கால் மாவட்டத்தில் பெண் அலுவலர்களை மட்டுமே கொண்டு இயங்கும் வகையில் 5 ‘பிங்க்' வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 5 வாக்குச்சாவடிகள் ‘பிங்க்' வாக்குச்சாவடிகள் என முழுவதும் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கும் வகையில், புதுமையான முறையில் அமைக்கப்பட்டிருந்தன.
வரிச்சிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி, செல்லூர் கால்நடை மருந்தகம், காரைக்கால் ஒப்பிலாமணியர் கோயில் தெரு அரசு தொடக்கப்பள்ளி, காரைக்கால் ஆயிர வைசியர் திருமண மண்டபம், நிரவி ஹுசைனியா அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் இந்த 'பிங்க்' வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காரைக்கால் ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘பிங்க்' வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா நேற்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியது: இந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணிகள் முழுவதையும் பெண்களே மேற்கொள்வது அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். இதுபோன்ற முயற்சிகள் ஒரு ஊன்றுகோலாய் அமையும் என்றார். ஸ்வீப் அதிகாரி முனைவர் ஷெர்லி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT