Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் - காலை முதலே மக்கள் ஆர்வம் : கடும் வெயிலுக்கு மத்தியில் வரிசையில் நின்று வாக்களிப்பு

நாகர்கோவிலில் வரிசையில் காத்து நின்று வாக்களித்த வாக்காளர்கள்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,234 வாக்குச்சாவடிகளிலும் அதிகாலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அவை சரிபார்க்கப்பட்டு அரை மணி நேரம்தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பிரதான வேட்பாளர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 15,71,651 வாக்காளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைப்போன்று கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 81 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் சுரேஷ்ராஜன், பாஜகசார்பில் எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் ஆஸ்டின், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ், பாஜக சார்பில் குமரி ரமேஷ், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக சார்பில் மனோ தங்கராஜ், அதிமுக சார்பில் ஜாண் தங்கம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, பாஜக சார்பில் ஜெயசீலன், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார், தமாகா சார்பில் ஜூட்தேவ் என பிரதான கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு சதவீதம்

வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டன. காலை 9 மணி நிலவரப்படி 9.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 21 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி 33.79 சதவீதம், மாலை 3 மணி நிலவரப்படி51.16 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 55.43 சதவீதவாக்குகள் பதிவாகியிருந்தன.

ஆட்சியர், எஸ்பி வாக்களிப்பு

மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். எஸ்.பி. பத்ரிநாராயணன் குருசடி அந்தோணியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதைப்போல் அனைத்து வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x